சனி, ஜூலை 16

இராசரத்தினம் சண்முகலிங்கம்





சில இழப்புக்கள் நெஞ்சைப் பிழிபவை. நினைவைக் கொல்பவை. அப்படியான சிலரில் என் அன்புக்குரிய பவுண் ஐயா வும் ஒருவர்.

மறைந்த இராசரத்தினம் சண்முகலிங்கம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். சமூக சேவையாளர்.

மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையின் (சடாட்சரதேவி) சகோதரர்.

நான் குந்தவையுடன் கதைக்கச் செல்லும்போதெல்லாம் மிக அன்பாகப் பழகுபவர். எங்கள் ஊரவர்களுக்காக பொதுவேலைகளில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர். தாமதமாகவே இவரது மரணச்செய்தி கிடைக்கப்பெற்றது.

எல்லோரும் பவுண்ஐயா என்றுதான் அழைப்போம்.

இலக்கியம் தவிர்ந்த வேறு எல்லாம் கதைப்பார். குந்தவையுடன் உரையாடும்போது இலக்கியத்தால் என்ன பிரயோசனம் என்று சிரித்துக் கொண்டு கேட்பார். நான் சொல்லுவேன் உங்கள் தங்கையைக் கேளுங்கோ என்று.

நான், ஆசிரியராக இருக்கின்ற நண்பர் நவநீதன், மறைந்த கிராம சேவையாளர் வெ. பிறேமச்சந்திரன், சமூர்த்தி அலுவலராக இருக்கின்ற நண்பர் ஆ.ஆனந்தராசா ஆகியோர் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், சனசமூகநிலையம், கிராம அபிவிருத்தி வேலைகள் எல்லாவற்றிலும் முக்கியமான ஆலோசகராக விளங்குவார்.

'கனடா நற்பணி மன்றம்' என்ற அமைப்பினூடாக அன்னார் மாணவர்களின் கல்விக்கு செய்த சேவைகள் அளப்பரியன. மறையும் வரை எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கில ஆசானாக விளங்கி வந்துள்ளார். அன்னாரோடு பழகக் கிடைத்த காலங்கள் மிக இனிமையானவை.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

- சு.குணேஸ்வரன்

2 கருத்துகள்:

  1. நன்றி மறத்தல்நன்றன்று அதுபோல
    நன்றாய் பழகியவர்களையும் எம்மால்
    மறக்கமுடியாது .

    பதிலளிநீக்கு