வெள்ளி, நவம்பர் 4

து. குலசிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்



பருத்தித்துறை பிரதேச செயலகம் நடாத்தும் 'வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா' சனிக்கிழமை பி.ப1.30 மணிக்கு இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் பிரதேச கலாசாரப் பேரவையினர் 2011 ஆம் ஆண்டுக்கான கலைப்பிரதி விருதினை 5 பேருக்கு வழங்குகிறார்கள். அதில் எனது அன்புக்குரிய இலக்கிய உறவு இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற இலக்கிய நேசமுள்ள மனிதர்கள் சிலரில் குலசிங்கமும் ஒருவர். அவர் ஒரு படைப்பாளி அல்ல. தீவிரமான வாசகன், இலக்கியத்தை நேசிப்பவர். நல்ல இலக்கியப் புதினங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்.

வடமராட்சி போர்ச்சூழலுக்குள் முடங்கியிருந்தபோது அப்போதைய மக்களின் மனத்துயரங்கள் பற்றி தமிழகத்திலிருந்து வெளிவந்த காலச்சுவடு சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணலில் விரிவாகப் பேசியிருந்தார்.

ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் இலக்கியப் பொக்கிஷம், தனது சொந்தப் பணத்தை நல்ல நூல்களின் தேட்டமாக ஆக்கி வைத்துள்ளார். இவர் அவ்வப்போது எழுதிய கடிதங்கள் தமிழகப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கனடாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'காலம்' ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது.அது பின்னர் பிரான்சில் இருந்து வெளிவந்த 'உயிர்நிழல்' சஞ்சிகையிலும் வெளியாகியிருந்தது.

மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு நலப்பணிகளுக்கு விளம்பரமில்லாத வகையில் அடக்கமாக ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். வாழ்வகம், அஞ்சலியகம் ஆகியவற்றின் சில நல்ல முயற்சிகளுக்கு உதவியிருக்கிறார்.

மிக முக்கியமான ஒரு பணியாக அண்மையில் வெளிவந்த கிரியா அகராதிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. 1700 இலங்கைச் சொற்கள் அந்த அகராதியில் இடம்பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 'அறிவோர் கூடல்' என்ற இலக்கியம் சார் அமைப்பினூடாக நல்ல விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு களம் அமைத்து வருகிறார்.

அவரின் இந்தப் பணிகளுக்கு எல்லாம் உற்சாகத்தைக் கொடுப்பதாக இந்தக் கௌரவம் அமையும் என்று எண்ணுகிறேன். அண்ணன் குலசிங்கம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு. குணேஸ்வரன் (துவாரகன்)


4 கருத்துகள்:

  1. நண்பர் குலசிங்கம் பற்றிய உங்கள் சிறிய ஆனால் காத்திரமான பதிவுக்கு நன்றி.

    நிறையச் சொல்லப்பட வேண்டிய நிறைவான மனிதர். ஆனால் அவரால் வளர்ந்த ஆனால் அவரை மறந்த பலர் அவர் பற்றிச் சொல்லாமலே இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்; நிறைவான மனிதர். நேற்று இரவுதான் நிகழ்வு பற்றி அறிந்தேன். அதனால் மனதில் பட்டதை அப்படியே எழுதினேன். வருகைக்கு நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11/05/2011 11:19 AM

    அவரின் இந்தப் பணிகளுக்கு எல்லாம் உற்சாகத்தைக் கொடுப்பதாக இந்தக் கௌரவம் அமையும் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி nadaasiva.

    பதிலளிநீக்கு