வெள்ளி, நவம்பர் 23

தமிழ் ஆவண மாநாடு 2013



நூலகம் நிறுவனம் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணமாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது. இம்மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாக நூலகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரங்களை வலைப்பதிவு நண்பர்களுக்காக இணைக்கிறேன்.


திகதி ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில், 2013
இடம் கொழும்பு தமிழ்ச் சங்கம், இலங்கை
மின்னஞ்சல் noolahamfoundation@gmail.com
தொலைபேசி (இலங்கை) 0094 112363261

அறிமுகம்

இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய , எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக ”தமிழ் ஆவண மாநாடு 2013” ஐயும் நடாத்தவிருக்கின்றது. 'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறும்

 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்

  1. வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
  2. ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
  3. தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
  4. சமூகத்தை ஆவணப்படுத்தல்
  5. மொழி இலக்கியப் பதிவுகள்
  6. அறிவுப்பகிர்வும் கல்வியும்
  7. ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
  8. எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
  9. நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
  10. கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்
ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.

தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.

மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும்.

முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:


Noolaham Foundation
No 7, 57th Lane, (Colombo Tamil Sangam)
Colombo-06, Sri Lanka
Phone (Land): 0094 112363261

 http://noolahamfoundation.org/wiki/index.php?title=Main_Page

புதன், நவம்பர் 21

புதிய நூலகம் - ஈழநாதன் நினைவிதழ்

புதிய நூலகம் - ஈழநாதன் நினைவிதழ்


நூலகம் நிறுவனத்தால் வெளியிடப்படும் "புதிய நூலகம்" இதழ் 15 வெளிவந்துள்ளது. இவ்விதழ் நூலகத்தின் வளர்ச்சிக்காக ஆரம்பகாலத்திலிருந்து பங்களித்த ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்துள்ளது.

இவ்விதழில் 'துயர் பகிர்கின்றோம்' என்ற நூலகம் நிறுவனத்தின் அஞ்சலிக்குறிப்பும், விக்கிபீடியா, ஆலமரத்தடி பதிவுகளும், ஈழநாதன் காலமானதை அறிந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் நண்பர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்புக்களின் தொகுப்பும், மேலும் கானாபிரபா, சசீவன், கீத் குமாரசாமி, லதா ஆகியோர் எழுதிய நினைவுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

நூலகம் நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.10.15.pdf



வெள்ளி, நவம்பர் 2

திருகோணமலை கலாசார பேரவையின் கௌரவிப்பில் நந்தினி சேவியர்


திருகோணமலை கலாசார பேரவையின் கௌரவிப்பில் நந்தினி சேவியர்
25 .10 .2012 உவர்மலை விவேகனந் தா கல்லூரியில் திருகோணமலை கலாசாரப்பேரவை நடத்தியவிழாவில் மூன்று படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.

சிங்கள எழுத்தாளர் குலதுங்க, தமிழ் எழுத்தாளர் நந்தினி சேவியர், முஸ்லிம் எழுத்தாளர் ஜனாப் அப்துல்வாகித் மூசீன் ஆகிய மூவினப் படைப்பாளிகளும் இந்தக் கௌரவத்தைப் பெற்றனர்.



படம் :- திருகோணமலை பிரதேச செயலாளர் . திருமதி .ச .ஜலதீபன் , சிங்கள எழுத்தாளர் - ggi குலதுங்க, திருகோணமலை மாவட்ட அரச.அதிபர் -மேஜர் ஜெனரல் dd ரஞ்சித் டி சில்வா, நந்தினிசேவியர் ,ஜனாப் அப்துல்வாகித் மூசீன் ,மேலதிக அரச அதிபர் எஸ் .அருள்ராசா