திங்கள், மார்ச் 26

வே.ஐ.வரதராஜனின் 'என் கடன்' கவிதைநூல் வெளியீடு


யாழ் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் வே.ஐ. வரதராஜனின் 'என் கடன்' என்ற கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு 31.03.2012 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கலாநிதி செ. திருநாவுக்கரசு, சி. சிவதாசன், கலாநிதி த. கலாமணி, கவிஞர் சோ. பத்மநாதன், இ.இராஜேஸ்கண்ணன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், செங்கை ஆழியான், கி. கிருபானந்தா, ஐ. வரதராஜன் ஆகியோர் நிகழ்வில் உரை நிகழ்த்துகின்றனர்.

அன்றையதினம் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த சிறந்த கவிதைநூலுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அல்அஸமத் தின் 'குரல் வழிக் கவிதைகள்'(2009), கவிஞர் சோ. ப வின் 'சுவட்டெச்சம்' (2010) ஆகிய நூல்கள் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

ஞாயிறு, மார்ச் 11

எழுத்தாளர் ஆனந்தமயில் காலமானார்.


எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது "ஓர் எழுதுவினைஞனின் டயரி" சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க.


எழுத்தாளர் ஆனந்தமயில் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 12 சிறுகதைகள் கொண்ட ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற தொகுப்பினூடாகவே இன்று பலருக்கும் அறிமுகமானவர். 70 களில் எழுத்துலகில் அறிமுகமானவர். துரதிஸ்டவசமாக அவரின் படைப்புக்கள் அப்போது நூலுருப்பெறாத காரணத்தினால் இலக்கிய உலகில் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருந்தார். வீரகேசரி, மல்லிகை, சமர், அலை முதலான ஏடுகளில் அவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.


மண்ணின் பதிவாக, உயிரோட்டமான வாழ்வின் பதிவாக அவரது பல கதைகள் உள்ளன. குறிப்பாக ‘முருகைக்கற்பூக்கள்’ என்ற சிறுகதை கடற்பிரதேச வாழ்வினைப் பதிவு செய்யும் ஈழத்துக் கதைகளில் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது.


மறைந்த ஆனந்தமயில் அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.

-சு.குணேஸ்வரன்



வெள்ளி, மார்ச் 2

அறிவோர் ஒன்றுகூடல் - 'தரிசனம்' சிறுகதைத் தொகுதி விமர்சனஉரை





04.03.2012 ஞாயிறு மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட 'தரிசனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சன உரை இடம்பெறவுள்ளது. உரைகளை சு.குணேஸ்வரன், வேல் நந்தகுமார் ஆகியோர் நிகழ்த்துவர். ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.

அறிவோர் ஒன்றுகூடல் நண்பர்கள் சார்பாக
சு.குணேஸ்வரன்